Skip to main content

தாழிடப்பட்ட கதவுகள் - நூலினை குறித்து

தாழிடப்பட்ட கதவுகள், தமிழ் சிறுகதை நூல் வரிசைகளில் நல்லதொரு வரவு. 25 ஆண்டு கால கோவை கலவரங்களின் பின்னணியில் எழுந்து வரும் அடுத்த படைப்பு. ஒவ்வொரு கலவரம் எனப்படுவையும் அந்த நிலத்தின் ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கிறது. கோவை கலவரமும் அப்படியே.

இந்துத்துவ தீய சக்திகள் பொருளாதார மேலாதிக்கத்திற்கான போட்டியில் பெரும்பான்மையான இந்துக்களை அதுநாள் வரை இணக்கம், சகோதரத்துவம் பாராட்டியிருந்தவர்களை சிதைத்து எதிரிகளாக மாற்றுவது கோவை, குஜராத், மும்பை என நெடுக நடந்திருக்கிறது.

தாழிடப்பட்ட கதவுகள். கதவுகள் என்றிருந்தாலும் அவை திறந்திருக்கும்போதுதான் அங்கே மகிழ்ச்சி, இயல்புத்தன்மை இருப்பதாக தமிழ்ச்சமூகம் நம்புகிறது என நினைக்கிறேன். ஒரு வீடு தாழிட்டு இருந்தால் அங்கே ஏதோ சரியில்லையோ என சந்தேகிக்க வைப்பதும் உண்டு. இன்று அந்த நிலையில்லை. ஆனால், ஒரு 20 வருடங்கள் முன்பெல்லாம் வீடுகளின் கதவுகள் பகல் முழுவதும் திறந்தே இருக்கும். அவ்வகையில் தாழிடப்பட்ட கதவுகள் என பெயர்க்காரணமும் சிறப்பே. மரணங்கள் எல்லாக் கதைகளிலும். மரணங்கள் கலைத்து போட்ட வாழ்விற்கு பின்னான எதிர்காலத்திற்கான அச்சமும், மனிதமும் எல்லாக் கதைகளிலும் இழையோடுகிறது.

இச்சிறுகதை களம் என்பது எதிர்பார்த்ததுதான். வெண்மணி என தலைப்பு வைத்துவிட்டு அங்கே என்ன பயிர் விளைந்தது, கோபாலகிருஷ்ண நாயுடுவின் புஜபல பராக்கிரமங்களை எவரும் எழுதுவார்களா என்ன? அவ்வாறே கோவை கலவரம் என்னும்போதே கதைக்களமும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் அ.கரீம் கதை சொல்லும் பாங்கு சிறப்பு. கதைக்குள் அவரது மொழி நடை, படுகொலைக்குப் பின்னான காலங்களில் பழக்கவழக்கங்கள் மாறுபாடு குறித்த அவதானிப்புகள், நுணுக்கமான செய்திகள் என்பவையே இச்சிறுகதை தொகுப்பினை உயிரோட்டமாக வைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.

சம்சுதீன் ஹீராவின் மௌனச் சாட்சியங்களே அநேகமாக கோவை கலவரங்கள் குறித்த முதல் இலக்கியப் பதிவு என நினைக்கிறேன். தாழிடப்பட்ட கதவுகளில் சம்சுதீன் ஹீரா மௌனச் சாட்சியங்களில் பெண் காம்ரேட் என ஒருவரை வைத்து ரொமாண்டிசிஸம் வலிந்து திணித்திருப்பது போல் எனக்குப் பட்டது. அது அந்த நாவலின் யதார்த்த களத்தை ஏதோ தொந்தரவு செய்தது போல் எனக்குத் தோன்றியது. பலருக்கு அவ்வாறு இல்லை என்பது சம்சுதீன் ஹீராவின் முகநூல் வாயிலாக தெரிகிறது. அ. கரீமிடம் அவை இல்லை. யதார்த்தம் அப்படியே பொதிந்திருக்கிறது.

சம்சுதீன் ஹீரா, அ. கரீம் இரண்டு பேரிடமும் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அது நீங்கள் இருவரும் இணைந்தோ அல்லது தனியாகவோ கோவை கலவரத்தில் வாழ்விழந்தவர்கள், வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானவர்களை, கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்கள் பக்கம் இருந்து அநீதி இழைத்தவர்கள், தவறான பாதையில் சென்ற இஸ்லாமியர்கள், காவலர் உடையில் இருந்த கடமை தவறியவர்கள் என இவர்களை அடையாளம் கண்டு ஒரு வாய்மொழி வரலாறு படைத்தால் என்ன? முடிந்தால் அந்தோணி செல்வராஜ் என வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒருவரது வாழ்க்கையை பதிந்தால் என்ன? பாரதி புத்தகாலய வெளியீடான அப்பணசாமியின் வெண்மணி வாய்மொழி வரலாறு அப்படியான புத்தகம். இன்றும் அதுவே நேரடி கள சாட்சியம்.

கடைசியாக, அது 2002-2004 காலம். நான் உதகையில் பணிபுரிந்த போது வார விடுமுறை நாட்களில் கோவையில் தான் இருப்பேன். காந்திபுரத்திலிருந்து கிராஸ் கட் ரோடு வழியாக பல சமயங்களில் நடந்தே விஜயா பதிப்பகம் சென்றிருக்கிறேன். பின்னும் விஜயா பதிப்பகத்திலிருந்து நடந்தே உக்கடம் பழைய புத்தக கடைகளுக்கு சென்றிருக்கிறேன். அந்த மணிகூண்டு இருக்கும் சாலையின் ஒரு மூலையில் எப்போதும் இருக்கும் மணல் மூட்டையோடு ராணுவ பங்கர் ஒன்றில் சில வட இந்திய காவலர்கள் அங்கே இயல்புத்தன்மையை குலைத்தவர்களாக இருந்தார்கள். கலவரங்கள் நடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னரும் அந்த இராணுவ பங்கர் போன்ற ஒன்று ஏதோ சரியில்லை என்பதற்காகவா, இங்கே ஏதோ ஒன்று இனி நிகழ்ந்து கொண்டே இருக்கப் போகிறது என்பதற்கு சான்றாகவா என்பது தெரியவில்லை. புதிதாக அல்லது வருபவர்கள் அனைவரையும் உற்று உற்றுப் பார்ப்பதும், நான் கை கொள்ளும் ஜோல்னா பை அவர்களை உறுத்துவதும் அசூயையானது. இது தினந்தோறும் நிகழ்வானால் எப்படி?


ஒரு காலத்தில் ஆலைகள், ஆலைகளால் கம்யூனிஸ்டுகள் என்றிருந்த நகரங்கள் பின்னான காலத்தில் ஆலைகள் முடப்படுகையில் தீவிர வலதுசாரிகளிடம் வசமாவது ஏன் நிகழ்கிறது? அந்த கம்யூனிஸ்டுகள் என்ன ஆனார்கள்?

Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க

JAMLO WALKS - சிறார் நாவல் அறிமுகம்

சமீபத்திய சிறார் கதைகளில் மிக முக்கியமானதும் அதிகம் வாசிக்கப்பட வேண்டியதுமாக நான் நினைப்பது விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் கயிறு . இன்று ஹிஜாப் ஒரு பிரச்சனையாக கலவரத்திற்கான சாக்காக பார்க்கப்படுகிறது . ஆனால் சமீப காலங்களாக (7-8 வருடங்களாக ) தமிழகத்தின் மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சாதி அடையாளம் கொண்ட கயிறுகளை கைகளில் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் . அதுதான் தடுக்கப்பட வேண்டியதும் தடை செய்ய வேண்டியதும் ஆகும் . அந்த நடப்பரசியலை விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறந்த முறையிலும் குழந்தைகளும் படித்திடும் வகையில் கதையாக்கியுள்ளார் . குழந்தைகள் சிறார்களுடன் உரையாடுவது அதுவும் கேள்வி எழுப்ப கற்றுக் கொடுப்பதுவே முற்போக்கு அமைப்புகள் கவனப்படுத்தி செய்ய வேண்டியதும் ஆகும் .   அது போலவே ஒரு நடப்பரசியல் தான் JAMLO WALKS. கொரானா பெருந்தொற்று நோய் தாக்குண்டு இறந்தவர்களைப் போலவே கொஞ்சமும் யோசியாமல் ஒரு நாட்டையே 4 மணி நேரத்தில் முடக்கிய ஒரு பெருங்கொடுமையாலும் இறந்தவர்கள் பலர் . அதுவும் எவ்வளவு வேதனையான மரணங்கள் : - பல கிலோமீட்டர் தூரம் நடந்து நடந்தே களைப்பாலும் , உண்ண நாட்கள் கணக்காய் உணவில்லாமல் பசி பட்டினி

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச பாடல்களையும், வெகுசில தேசபக்தி பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடி ஒரு புரட்சிக்கவியை ஒரு கூட்டுக்குள் அடைக்கப

சிரியாவில் தலைமறைவு நூலகம் - நூல் அறிமுகம்.

போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது . அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது . எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர் . தினமும் சாப்பிடுவது என்பதெல்லாம் அங்கே பெரும் கனவு . ஒரு பக்கம் அரசு போராளிகளை நசுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளையும் மொத்த மொத்தமாக கொன்று குவிக்கிறது . புதைக்க கூட இடமில்லை . இறுதிசடங்கு என்ற மரியாதையும் பலருக்கு இல்லை . இது சிரியாவில் உள்ள தராயா நகரத்தில் . இப்படியான ஒரு துன்பவியல் நிகழ்வு நடக்கும் இடத்தில் போர்காலத்தில் , ஒரு நூலகம் அமைக்கப்படுகிறது , அங்கே புத்தகங்கள் விநியோகமும் நடைபெறுகின்றது ; வாசிப்பும் விவாதமும் நடைபெறுகின்றது என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல . ஒரு சிலிர்ப்பான அனுபவம் . ஆம் , மொத்தமாக வன்முறையினை நம்பாமல் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்திய அடிப்படைவாத குணமற்ற ஒரு போராளி குழு ஒன்று குண்டுகளின் மழையில் சிதிலமடைந்துள்ள பல்வேறு வீடுகளில் கட்டிடங்களில் இருந்து புத்தகங்களை தேடி எடுக்கின்ற